முகப்பு
செய்திகள்

உணவின்றி மக்கள் தவிக்குபோது சமையல் செய்யும் விடியோவை வெளியிடுவதா?: சானியா மிர்சா கேள்வி!

உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் கஷ்டப்படும்போது பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் சமையல் செய்யும் விடியோக்களை வெளியிடுவதா

Updated On : 4 ஏப்ரல், 2020 at 4:10 PM
பகிர்:

கரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் கஷ்டப்படும்போது பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் சமையல் செய்யும் விடியோக்களை வெளியிடுவதா என பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 59,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதனாக் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமையல் செய்யும் விடியோ, வீட்டைச் சுத்தம் விடியோ போன்றவற்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்குப் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விமரிசனம் செய்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

சமையல் விடியோக்கள், உணவுப் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவதை நாம் இன்னும் நிறுத்தவில்லையா? நம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் உயிரை இழக்கிறார்கள். ஒருவேளை உணவு கிடைத்தாலே அது அவர்கள் அதிர்ஷ்டம் என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.  

கரோனா பாதிப்பினால் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக அவதிப்படும் 1 லட்சம் பேருக்காக ரூ. 1.25 கோடி நிதி திரட்ட உதவியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஊரங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையின்றி தவிக்கும் அன்றாடக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்காக நிதி திரட்டியுள்ளார் சானியா மிர்சா. சஃபா அமைப்புக்கு அனைவரும் உதவித்தொகை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி ரூ. 1.25 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் ஒரு குழுவாகச் செயல்பட்டு உதவி தேவைப்படும் மக்களுக்கு ஆதரவாக இருந்தோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு வழங்கினோம். ஒரு வாரத்தில் ரூ. 1.25 கோடி திரட்டினோம். அந்தத் தொகை 1 லட்சம் பேருக்கு உதவியாக இருக்கும். இந்தச் சேவை தொடர்கிறது என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.