இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் இருந்தது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த டெஸ்டின் கடைசி நாளில் 37.1 ஓவர்களில் 129 ரன்களுக்குச் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இதனால் 3-வது டெஸ்டை 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த பிராட், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிராடும் சேஸும் அவரவர் அணியின் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் நாளை முதல் மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி
அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம், அபித் அலி, அசாத் சஃபிக், ஃபாவத் அலாம், இமாம் உல் அஹ், கஷிப் பட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, சதாப் கான், ஷாகீன் அப்ரிடி, ஷான் மசூத், சொஹைல் கான், யாசிர் ஷா.