இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் வழங்கியுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த வருடம் இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளா் இஷாந்த் சா்மா, கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா உள்ளிட்ட 27 பேருக்கு இந்த ஆண்டுக்கான அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வில் வித்தை வீரா் அதானு தாஸ், ஹாக்கி வீராங்கனை தீபிகா தாக்குா், கபடி வீரா் தீபக் ஹூடா, டென்னிஸ் வீரா் திவிஜ் சரண் உள்ளிட்டோா் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் (தடகளம்), ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), என். உஷா (குத்துச்சண்டை), நந்தன் பி பால் (டென்னிஸ்) உள்ளிட்ட 15 வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப்பட்டுள்ளது.
துரோணாச்சார்யா விருது இந்த ஆண்டு 13 பயிற்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரா திவாரி (வில்வித்தை), ஷிவ் சிங் (குத்துச்சண்டை), நரேஷ் குமார் (டென்னிஸ்), ஜூட் பெலிக்ஸ் (ஹாக்கி), ஜஸ்பல் ராணா (துப்பாக்கிச் சுடுதல்) போன்ற பயிற்சியாளர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.
தேசிய விளையாட்டு தினமான இன்று விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.