முகப்பு
செய்திகள்

ஜனவரியில் ஆர்ஜெண்டீனா செல்கிறது இந்திய மகளிர் ஹாக்கி அணி

இருதரப்பு ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜனவரியில் ஆர்ஜெண்டீனா செல்கிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:


புது தில்லி: இருதரப்பு ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஜனவரியில் ஆர்ஜெண்டீனா செல்கிறது. 
கரோனா நோய்த்தொற்று சூழலால் பல்வேறு போட்டிகள் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் ஓராண்டுக்குப் பிறகு இந்திய அணி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆர்ஜெண்டீனாவில் அந்நாட்டு மகளிர் அணியுடன் 8 ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி மோதவுள்ளது. 
ஜனவரி 17-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக, 25 வீராங்கனைகள், 7 உதவிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி தில்லியில் இருந்து ஜனவரி 3-ஆம் தேதி ஆர்ஜெண்டீனா புறப்படுகிறது. 
ஆர்ஜெண்டீனாவில் இரு நாட்டு அணிகளுக்காக "பயோ-பபுள்' பாதுகாப்பு வளையத்தை உருவாக்க ஹாக்கி இந்தியா, ஆர்ஜெண்டீனா ஹாக்கி சங்கம் திட்டமிட்டுள்ளன.  ஆர்ஜெண்டீனாவில் இந்திய அணி தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், "டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அங்கு செல்லும் நாள்கள் நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஆர்ஜெண்டீனா போன்ற வலுவான அணியுடன் விளையாடுவது 
முக்கியமானதாகும். 
இந்தப் போட்டியை நாங்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கிறோம். பெங்களூரில் 5 மாதங்கள் பயிற்சியில் இருந்த நிலையில், நாங்கள் எவ்வாறு தயாராகியிருக்கிறோம் என்பதை எங்களுக்கு உணர்த்துவதாக இந்தப் போட்டி இருக்கும்' என்றார். 
இந்திய மகளிர் ஹாக்கி அணி கடைசியாக கடந்த ஜனவரியில் நியூஸிலாந்து பயணம் மேற்கொண்டு, அந்த அணி மற்றும் பிரிட்டன் அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3 ஆட்டங்களில் இந்தியா வென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →