இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவால் மட்டுமே டி20 கிரிக்கெட்டிலும் இரட்டைச் சதம் அடிக்க முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக். இவர் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். அப்போது, டி20 கிரிக்கெட்டில் எந்த வீரர் முதன்முதலாக இரட்டைச் சதம் அடித்து சாதனை படைப்பார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிராட் ஹாக்,
"தற்போதைய சூழலில் ரோஹித் சர்மாவுக்கு மட்டும்தான் அந்த திறன் இருப்பதாக நான் நினைக்கிறேன். நல்ல ஸ்டிரைக் ரேட், சரியான டைமிங் மற்றும் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிக்ஸ் அடிப்பதற்கான கிரிக்கெட் ஷாட்கள் அவரிடம் உள்ளன" என்றார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக கடந்த 2018-இல் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை கிறிஸ் கெயிலே தன்வசப்படுத்தியுள்ளார். 2013-இல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் ஒரு ஆட்டத்தில் 66 பந்துகளை எதிர்கொண்டு 175 ரன்கள் விளாசினார்.
டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 118.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை ரோஹித் சர்மாவே படைத்துள்ளார். 2014-இல் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 264 ரன்கள் எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மூன்று முறை இரட்டைச் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைச் சதங்களை அடித்த ஒரே வீரரும் ரோஹித் சர்மாதான்.