கரோனா காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக அவதிப்படும் 1 லட்சம் பேருக்காக ரூ. 1.25 கோடி நிதி திரட்ட உதவியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 37,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக அவதிப்படும் 1 லட்சம் பேருக்காக ரூ. 1.25 கோடி நிதி திரட்ட உதவியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இதுபற்றி அவர் கூறியதாவது:
கடந்த வாரம் ஒரு குழுவாகச் செயல்பட்டு உதவி தேவைப்படும் மக்களுக்கு ஆதரவாக இருந்தோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு வழங்கினோம். ஒரு வாரத்தில் ரூ. 1.25 கோடி திரட்டினோம். அந்தத் தொகை 1 லட்சம் பேருக்கு உதவியாக இருக்கும். இந்தச் சேவை தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
ஊரங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலையின்றி தவிக்கும் அன்றாடக்கூலி தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்காக நிதி திரட்ட முன்வந்தார் சானியா மிர்சா. சஃபா அமைப்புக்கு அனைவரும் உதவித்தொகை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி ரூ. 1.25 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.