தந்தை மகனைத் திட்டியதைப் போல உணர்கிறேன்: என். சீனிவாசன் பேட்டி குறித்து சுரேஷ் ரெய்னா
என். சீனிவாசன் எனக்குத் தந்தை போன்றவர். எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார்...
தன்னுடைய குடும்பத்தினருக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. இதன்பிறகு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசன், ரெய்னாவை விமரிசித்து பேட்டியளித்தார். பிறகு தன்னுடைய பேட்டி தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள சுரேஷ் ரெய்னா, தன்னுடைய விலகல் மற்றும் சீனிவாசனின் பேட்டி குறித்து கூறியதாவது:
ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது எனது சொந்த முடிவு. குடும்பத்துக்காக இந்தியாவுக்குத் திரும்பியுள்ளேன். சிஎஸ்கேவும் எனது குடும்பம் தான். தோனி என் வாழ்க்கையின் முக்கியமான மனிதர். இது கடினமான முடிவு. எனக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை. யாரும் காரணம் இல்லாமல் ரூ. 12.50 கோடியை விட்டுத்தர மாட்டார்கள். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் 4, 5 வருடங்களுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளேன்.
என். சீனிவாசன் எனக்குத் தந்தை போன்றவர். எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். தன்னுடைய இளைய மகன் போல நடத்துவார். அவர் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மகனை தந்தை திட்டியதைப் போல உணர்கிறேன். நான் விலகியதற்கான உண்மையான காரணம் அப்போது அவருக்குத் தெரியாது. இப்போது நாங்கள் இருவரும் இந்த விவகாரம் பற்றி பேசிவிட்டோம். இதிலிருந்து நானும் சிஎஸ்கேவும் மீண்டு வர நினைக்கிறோம்.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் நான் பயிற்சி எடுத்து வருகிறேன். என்னை சிஎஸ்கே குழுவில் மீண்டும் பார்க்கக்கூடிய வாய்ப்பு உருவாகலாம் என்று கூறியுள்ளார்.