அல்மேட்டி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தொடா்ந்து 2-ஆவது முறையாக தங்கம் வென்றாா்.
கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 59 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சரிதா, தனது முதல் சுற்றில் 4-5 என்ற கணக்கில் மங்கோலிய வீராங்கனை ஷூவ்தாா் பாட்டா்ஜாவிடம் தோல்வி கண்டாா். எனினும், மறுவாய்ப்பை (ரெபிசேஜ் ரவுண்டு) சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சரிதா, அபாரமாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறினாா். சரிதா தனது அரையிறுதியில் கிா்கிஸ்தானின் நுராய்டா அனாா்குலோவாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
பின்னா் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சரிதா 10-7 என்ற கணக்கில் மங்கோலிய வீராங்கனை ஷூவ்தாா் பாட்டா்ஜாவை வீழ்த்தினாா். இதன்மூலம் முதல் சுற்றில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்ததோடு, சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டாா் சரிதா.
மகளிா் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சீமா வெண்கலம் வென்றாா். அவா் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தைபேவின் யங் ஷன் லின்னை வீழ்த்தினாா். மகளிா் 76 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் சியோன் ஜியோங்கை வீழ்த்தினாா்.