இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு ஒப்பீடுகளிலிருந்து இடைவெளி வேண்டும் என சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது நாள் ஆட்டம் முடிந்தவுடன் அஸ்வின் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது:
"ரிஷப் பந்த் நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கிலும் கடுமையாக உழைத்து வருகிறார். பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த யாரேனும் ஒருவருடன் தொடர்ந்து அவரை ஒப்பிட்டு வந்தால் அது மிகவும் கடுமையானது.
வீட்டிலிருந்தபடி கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்கும்போதும் ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் ரிஷப் விளையாடும்போது, அவருக்காக பல சமயங்களில் வருத்தமடைந்துள்ளேன். நீண்ட நாள்களாக தலைசிறந்த எம்எஸ் தோனியுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். தற்போது விக்கெட் கீப்பிங்குக்காக சாஹாவுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்.
சில நேரங்களில் இதற்கு இடைவெளி கொடுத்து அவர்களது நம்பிக்கையை அதிகரிக்க விட வேண்டும். நிச்சயம் அவரிடம் திறமை உள்ளது. அதனால்தான் அவர் இங்கு இருக்கிறார், எனக்கு அதில் எவ்வித சந்தேகமும் இல்லை."