முகப்பு
செய்திகள்

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி: இரட்டைச் சதம் அடித்து அசத்திய மும்பையின் பிரித்வி ஷா!

இளம் வீரர் பிரித்வி ஷா, 152 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகளுடன் 227 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

விஜய் ஹசாரே போட்டியில் புதுச்சேரி அணிக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்துள்ளார் மும்பையின் பிரித்வி ஷா.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற புதுச்சேரி அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் பிரித்வி ஷா, 152 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகளுடன் 227 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ள சூர்யகுமார் யாதவ், 58 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ஆதித்ய தரே, 56 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்துள்ளது. 

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த 8-வது இந்திய வீரர் என்கிற பெருமையை பிரித்வி ஷா பெற்றுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா, ஷிகர் தவன், சஞ்சு சாம்சன், கரண் கெளசல், யாஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த இந்தியர்கள். நான்கு நாள்களுக்கு முன்பு தில்லி அணிக்கு எதிராக சதமடித்த பிரித்வி ஷா, இப்போது இரட்டைச் சதமெடுத்து அசத்தியுள்ளார். 

விஜய் ஹசாரே போட்டியில் குரூப் டி பிரிவில் உள்ள மும்பை அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.