இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆனால், 4-ம் நாள் ஆன இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டம் மழையால் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
ஏற்கெனவே, முதல் நாள் ஆட்டமும் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டதால் ஆட்டத்தில் பெரும்பாலான ஓவர்கள் வீணாகியுள்ளன.