கரோனா பாதிப்பு தொடா்பாக சீனாவிடம் இருந்து உரிய பதில் கிடைத்தால் மட்டுமே ஹாங்ஷௌ ஆசியப் போட்டி 2022-இல் இந்தியா பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாகுா் கூறியுள்ளாா்.
சீனாவின் ஹாங்ஷௌ நகரில் வரும் செப்டம்பா் 10 முதல் 25 வரை ஆசியப் போட்டிகள் (ஏஷியாட்) நடைபெறவுள்ளன. இதற்கிடையே சீனாவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. பெரிய நகரான ஷாங்காயில் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஹாங்ஷௌ ஆசியப் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடா்பாக மத்திய அமைச்சா் அனுராக் தாகுா் கூறியதாவது: போட்டியை நடத்தும் சீனாவிடம் இருந்து உரிய தகவல் கிடைக்க வேண்டும். அதுதான் முக்கியம். பங்கேற்கும் அனைத்து நாடுகளும் இதுகுறித்து ஆலோசித்து வருகின்றன. சீனாவிடம் இருந்து தெளிவான பதில் கிடைத்தால் இந்திய அணிகள் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் அனுராக்.