சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து சுற்றுகளும் இன்றுடன் நிறைவடைந்தன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வெல்ல கடுமையான போட்டி நடைபெற்றது. ஓபன் பிரிவில் ஜெர்மனியை வீழ்த்திய இந்திய பி அணி, வெண்கலப் பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ்தான் தனது முதல் இடத்தைத் தக்கவைத்து தங்கம் வென்றது. அந்த அணி நெதர்லாந்தை 2.5-1.5 என வீழ்த்தியது. அர்மீனியா ஸ்பெயினை 2.5-1.5 என வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றது.
மகளிர் பிரிவில் உக்ரைன் மகளிர் அணி தங்கம் வென்றது. ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் இந்திய ஏ அணி வெண்கலத்தையும் வென்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பதக்கம் வென்றுள்ளது.
தனிநபர் பிரிவில் இந்தியாவின் குகேஷ், நிஹல் சரின், இங்கிலாந்தின் டேவிட் ஹவல் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள். இந்தியாவின் அர்ஜுன் வெள்ளிப் பதக்கத்தையும் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்கள்.
விளையாடிய 11 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற குகேஷ், இரு ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்தார். நிஹல் சரின், 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளையும் 5 டிராக்களையும் அடைந்தார்.
மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தானியா சச்தேவ், வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.