பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 2-வது நாளில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் 657 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரன்ரேட் - 6.50. ஸாக் கிராவ்லி 122, பென் டக்கட் 107, ஆலி போப், ஹாரி புரூக் 153 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பாபர் ஆஸம் 106, ஷகீல் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தொடக்க வீரர்களான அப்துல்லா ஷஃபிக் 114 ரன்களும் இமாம் உல் ஹக் 121 ரன்களும் எடுத்தார்கள்.
கிரிக்கெட்டில் பந்தைப் பளபளப்பாக்குவதற்காக உமிழ்நீரை வீரர்கள் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் கரோனா காலத்தில் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது அத்தடை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்தைப் பளபளப்பாக்குவதற்கு வினோதமான வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது இங்கிலாந்து அணி.
இன்று காலை 72-வது ஓவர் முடிந்த பிறகு பந்தைக் கையில் எடுத்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சக வீரர் ஜாக் லீச்சின் தலையில் வைத்து பந்தைத் தேய்த்தார். லீச்சின் தலையில் வியர்வை உள்ள பகுதிகளில் பந்தைத் தேய்த்து பளபளப்பை உண்டாக்க முயன்றார் ரூட். இச்சம்பவத்தின் விடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த தடை உள்ளதால் வினோதமான முயற்சியை மேற்கொண்ட ஜோ ரூட்டை ஆச்சர்யத்துடன் பாராட்டினார்கள் வர்ணனையாளர்கள். பந்தில் வியர்வையைப் பயன்படுத்திப் பளபளப்பாக்குவது சரியான முறை. எனவே இதை அவர் செய்துள்ளார் என்று விளக்கம் அளித்தார்கள். ரசிகர்களுக்கு இந்த விஷயம் புதிதாகவும் வினோதமாகவும் இருப்பதால் இக்காணொளி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.