2022-ம் ஆண்டு பருவத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகப் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.
ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. கடந்த வருடம் செப்டம்பரில் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் ஆட்டத்தின் முதல் சுற்றில் நாடியாவுடன் இணைந்து விளையாடி தோல்வியடைந்துள்ளார். அடுத்ததாக ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் விளையாடவுள்ளார்.
இந்நிலையில் தோல்விக்குப் பிறகு சானியா மிர்சா கூறியதாவது:
இதுவே எனது கடைசிப் பருவம் என முடிவெடுத்துள்ளேன். ஒவ்வொரு வாரமாகக் கடந்து வருகிறேன். முழுப் பருவமும் விளையாடுவேனா எனத் தெரியாது. ஆனால் விளையாட நினைக்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. என் மகனுக்கு மூன்று வயது. இந்த வயதில் அவனை என்னுடன் அழைத்துக்கொண்டு பல ஊர்களுக்குச் செல்கிறேன். இதை நான் மனத்தில் கொள்ள வேண்டும். என்னுடைய உடல் சோர்வடைந்து வருகிறது. என் முழங்கால் இன்று மிகவும் வலித்தது. அதனால் தான் நாங்கள் தோற்கவில்லை. வயது அதிகமாவதால் காயமானால் உடனடியாக அதிலிருந்து குணமாக முடிவதில்லை என்றார்.
2010-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்தார் சானியா மிர்சா. 2018 அக்டோபரில் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.