இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவைப்படுகின்றன. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளதால் வரலாற்று வெற்றியை அந்த அணி இன்று அடையவுள்ளது.
இந்நிலையில் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகச் சமூகவலைத்தளங்களின் வழியாகச் சிலர் புகார் அளித்துள்ளார்கள். இந்திய ரசிகர்களை மோசமான வார்த்தைகளால் சிலர் இழிவுபடுத்தியாகவும் இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் ட்விட்டரில் சிலர் தங்களை அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக எட்ஜ்பாஸ்டன் மைதான நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) தகவல் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.