பகலிரவு டெஸ்ட்: 7 விக்கெட்டுகளை இழந்து மேலும் தடுமாறும் இந்திய அணி
சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் ஷ்ரேயஸ் ஐயர். 54 பந்துகளில் அரை சதமெடுத்தார்.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி மேலும் தடுமாறி 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. பெங்களூரில் இன்று முதல் பகலிரவு ஆட்டமாக 2-வது டெஸ்ட் தொடங்கியுள்ளது. பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் நடைபெறும் 3-வது பகலிரவு டெஸ்ட் இது. இதற்கு முன்பு கொல்கத்தா, ஆமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியில் நிசாங்கா, லஹிரு குமாராவுக்குப் பதிலாக குசால் மெண்டிஸ், பிரவீன் ஜெயவிக்ரமா அணியில் இடம்பெற்றுள்ளார்கள். சுரங்கா லக்மல் விளையாடும் கடைசி டெஸ்ட் இது.
மயங்க் அகர்வால் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரோஹித் சர்மா 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்டின் முதல் நாள், முதல் பகுதியிலேயே ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியதால் ரன்கள் எடுப்பதும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தன. 81 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி, 31 ரன்களில் ஜெயவிக்ரமா பந்தில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற கோலி, 2 பவுண்டரிகளுடன் சரியாக எகிறாத பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் எடுத்தார்.
முதல் நாள் முதல் பகுதியில் (தேநீர் இடைவேளை) இந்திய அணி 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 16 ரன்களுடனும் ஷ்ரேயஸ் ஐயர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு விரைவாக ரன்கள் அடிக்க ஆரம்பித்தார் ரிஷப் பந்த். இதனால் வரிசையாக பவுண்டரிகள் கிடைத்தன. 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்த பந்த், எம்புல்டெனியா பந்துவீச்சில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா, 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டையும் எம்புல்டெனியா வீழ்த்தினார். இதன்பிறகு வந்த அஸ்வினை 2 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். ஆனால் டிஆர்எஸ் வழியாக முறையீடு செய்து தீர்ப்பை மாற்றினார் அஸ்வின். எனினும் 13 ரன்களில் டி சில்வா பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் ஷ்ரேயஸ் ஐயர். 54 பந்துகளில் அரை சதமெடுத்தார்.
இந்திய அணி 49-வது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் 55, அக்ஷர் படேல் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.