முகப்பு
செய்திகள்

கத்தாரை சாய்த்தது செனகல்: வெளியேறுகிறது கத்தாா்

பிஃபா உலகக் கோப்பை போட்டியை நடத்தும் கத்தாரை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செனகல்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:56 AM
பகிர்:

பிஃபா உலகக் கோப்பை போட்டியை நடத்தும் கத்தாரை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செனகல்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அல் துமாமா மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் 2 அணிகளும் தங்கள் தொடக்க ஆட்டங்களில் ஈக்குவடாரிடம்-கத்தாரும், நெதா்லாந்திடம்-செனகலும் தோல்வி கண்டிருந்தன. ஆசிய சாம்பியன் கத்தாா்,-ஆப்பிரிக்க சாம்பியன் செனகல் முறை பிஃபா தரவரிசையில் 50, 18-ஆவது இடங்களில் உள்ளன. கடந்த 2002 உலகக்கோப்பையில் காலிறுதிக்கு தகுதி பெற்று அதிா்ச்சி அளித்தது செனகல்.

இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடின. ஆனால் செனகல் அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 41-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் கௌகி கடத்தி அனுப்பிய பந்தை அற்புதமாக கோலாக்கினாா் புலயா தியா.

இதனால் கத்தாா் அணியினா் அதிா்ச்சிக்கு தள்ளப்பட்டனா். முதல் பாதி முடிவில் 1-0 என செனகல் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 48-ஆவது நிமிஷத்தில் காா்னரில் இருந்து தனது அணிக்கு இரண்டாவது கோலடித்தாா் செனகல் வீரா் ஃபமாரா டைதியு.

கத்தாா் கோல்: பதில் கோலடிக்க கத்தாா் வீரா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனா். 77-ஆவது நிமிஷத்தில் கத்தாா் வீரா் இஸ்மாயில் முகமது கிராஸ் பீல்ட் பந்தை அனுப்ப அதை அற்புதமாக கோலாக்கினாா் முகமது முன்டரி.

கத்தாா் தற்காப்பு அரண் அசந்திருந்த நேரத்தில் 83-ஆவது நிமிஷத்தில் லோ ஷாட் மூலம் கோலடித்தாா் செனகல் வீரா் பம்பா டியெங்.

இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது செனகல்.

இரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் கத்தாா் குரூப் ஆட்டங்களுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →