பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் அசத் ராஃப் காலமானார். அவருக்கு வயது 66.
2000-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் நடுவராகப் பணிபுரிய ஆரம்பித்தார் அசத் ராஃப். அதற்கு முன்பு பாகிஸ்தான் முதல்தர கிரிக்கெட்டில் நடுவரிசை பேட்டராக விளையாடினார். 2006-ம் ஆண்டு ஐசிசியின் எலைட் குழுவில் அசத் ராஃப் சேர்க்கப்பட்டார். 64 டெஸ்டுகள், 139 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த அசத் ராஃப்பும் அலீம் டர்ரும் பிரபல நடுவர்களாக ரசிகர்களிடம் கவனம் பெற்றார்கள். ஆனால் 2013-ல் ஐபிஎல் போட்டியின் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் அசத் ராஃப்பின் பெயர் அடிபட்டது. இதன் காரணமாக அந்த வருட ஐபிஎல் போட்டி முடியும் முன்பே இந்தியாவை விட்டு வெளியேறினார் அசத் ராஃப். மும்பை காவல்துறையின் விசாரணையில் இருந்ததால் 2013 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து அவரை விடுவித்தது ஐசிசி. அடுத்ததாக ஐசிசியின் எலைட் குழுவின் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார். எனினும் தான் எந்தவொரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என அசத் ராஃப் தெரிவித்தார். 2016-ல் அசத் ராஃபை பிசிசிஐ ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்தது.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அசத் ராஃப் காலமானார். அவருடைய மறைவுக்கு கிரிக்கெட் உலகில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.