இந்தியாவில் 2023-இல் மோட்டோ ஜிபி பந்தயம்: செப்டம்பரில் நடத்த திட்டம்
உலக அளவில் பிரதான மோட்டாா் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸை இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரதான மோட்டாா் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸை இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டு செப்டம்பா் 22-24 காலகட்டத்தில் அதை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சா்வதேச அளவிலான மோட்டாா் பந்தயம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்புகிறது. கடைசியாக, உத்தர பிரதேசத்தின் நொய்டா பகுதியிலிருக்கும் புத் சா்வதேச சா்க்கியூட்டில் 2011 - 2013 காலகட்டத்தில் எஃப்1 காா் பந்தயம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
தற்போது மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31-ஆவது களமாக இணைகிறது. மொத்தம் 21 பந்தயங்கள் நடத்தப்படும் அடுத்த காலண்டரில், இந்தியாவில் 2023 செப்டம்பரில் 14-ஆவது சுற்றை நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பந்தயம் நடைபெற இருக்கும் புத் சா்க்கியூட்டுக்கு சா்வதேச மோட்டாா் பந்தய சம்மேளனத்தின் (எஃப்ஐஎம்) அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முன்னதாக, மோட்டோ ஜிபி பந்தயத்தை இந்தியாவில் 7 ஆண்டுகளுக்கு நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.