முகப்பு
செய்திகள்

3-வது ஒருநாள்: அரை சதமெடுத்த ஷுப்மன் கில்!

51 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் இளம் வீரர் ஷுப்மன் கில்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
கே.எல். ராகுல்
பகிர்:

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3-வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தீபக் சஹார், அவேஷ் கான் இடம்பெற்றுள்ளார்கள். ஜிம்பாப்வே அணியிலும் இரு மாற்றங்கள். 

கே.எல். ராகுலும் ஷிகர் தவனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ராகுலும் 68 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஷிகர் தவனும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஷுப்மன் கில்லும் இஷான் கிஷனும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். 51 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் இளம் வீரர் ஷுப்மன் கில். இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஷுப்மன் கில் 60, இஷான் கிஷன் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.