2023, 2024 என இரு ஆண்டுகளிலும் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து 2022 ஆசியக் கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
யாரும் எதிர்பாராத வகையில் 2022 ஆசியக் கோப்பைப் போட்டியை இலங்கை அணி வென்றது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் 6-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் விருது ராஜபக்சவுக்கும் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கும் வழங்கப்பட்டன. முதலில் பாகிஸ்தானிடம் அடுத்ததாக இலங்கையிடம் என சூப்பர் 4 சுற்றில் விளையாடிய முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோற்றது. இதனால் இந்திய அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது.
2023, 2024 என இரு ஆண்டுகளுக்கான ஆசியக் கோப்பை குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
2018, 2022 ஆசியக் கோப்பைப் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தியது. 2023 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதால் போட்டி நடத்தும் நாடு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.