ஒருநாள்: அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்த மிட்செல் மார்ஷ்!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், அதிரடியாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ், அதிரடியாக விளையாடி 81 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. மும்பையில் முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பாண்டியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஜடேஜா, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், பாண்டியா ஆகிய பந்துவீச்சாளர்களும் இஷான் கிஷன், ஷுப்மன் கில், கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் ஆகிய பேட்டர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
ஆஸி. அணியில் அலெக்ஸ் கேரிக்குப் பதிலாக ஜோஷ் இங்க்லிஷ் இடம்பெற்றுள்ளார். காயத்திலிருந்து குணமாகாத டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் ஆஸி. அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களில் போல்ட் செய்தார் சிராஜ். பிறகு மிட்செல் மார்ஷும் கேப்டன் ஸ்மித்தும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். ஸ்மித், 22 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். 51 பந்துகளில் அரை சதமெடுத்த மிட்செல் மார்ஷ், அதன்பிறகு அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்தார். 65 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்த மார்ஷ், மற்றொரு சிக்ஸர் அடிக்க முயன்று ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி, 21 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. லபுஷேன் 13, ஜோஷ் இங்க்லிஷ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.