மல்யுத்த வீரர்கள் நடத்தப்பட்ட விதத்தை நினைத்து இரவெல்லாம் தூக்கமே வரவில்லை என 5 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரா், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றபோது ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாடாளுமன்ற திறப்பு விழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், விளையாட்டு வீரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச்சென்றனர்.
அது குறித்த புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த மல்யுத்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மல்யுத்த வீரர்கள் நடத்தப்பட்ட விதம் வருத்தமளிப்பதாக துப்பாக்கிச்சூடு வீரரும் 5 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான அபிநவ் பிந்த்ரா தெரிவித்துள்ளார். என்னைப்போன்ற சக வீரர்களின் துயரமான புகைப்படங்களைப் பார்க்க முடியவில்லை. விளையாட்டு தொடர்பான நிறுவனங்கள் முழுவதும் சுதந்திரமான பாதுகாப்பான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது. எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்பான ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.