கோலிக்கு அவர் விளையாட்டு என்னவென்று தெரியும்: விக்ரம் ரத்தோர்
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலி அவரது 50-வது சதத்தை எட்டியது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
விராட் கோலிக்கு கிரிக்கெட்டில் அவரது பணி என்னவென்று தெரியும் என்பதால் பயிற்சியாளர்களின் கவனம் அவருக்குத் தேவைப்பட்டதில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
நேற்று (நவ.15) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-ஆவது சதத்தை எட்டி, சச்சின் டெண்டுல்கா் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தாா்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வென்று, முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோலி குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசும்போது, “கோலிக்கு அவரது விளையாட்டு தெரியும். தயாராவதற்கு மட்டுமே நாங்கள் உதவுவோம். அவருக்கு எதை பற்றியாவது தெரிந்து கொள்ள விரும்பினால் எங்களிடம் வந்து கேட்பார். மற்றபடி பயிற்சியாளர்களின் உதவி தேவைப்படாது. இப்போது கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என அவருக்குத் தெளிவாக தெரியும், அதற்கு சரியான மனநிலையில் அவர் இருக்க வேண்டும். நல்ல மனநிலையில் இருக்கும்போது பேட் அவர் சொல்வதைக் கேட்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வரலாறு படைத்த விராட் கோலி; இறுதி ஆட்டத்தில் இந்தியா
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பதும் கோலியின் சதம் அதை சாத்தியப்படுத்தியதையும் குறித்து அணியின் உடை மாற்றும் அறையில் நிலவிய சந்தோசமான சூழலை விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் (அணியினர்) கடினப்பட்டு பயிற்சி மேற்கொண்டார்கள். விளையாட்டு சரியாக சென்றிருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.
மேலும், அவர் பந்து வீச்சாளர்கள் முகமது ஷமியைச் சிறப்பாக பயன்படுத்திய பெருமை இந்திய அணியின் நிர்வாகத்துக்குச் சேரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.