முகப்பு
செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த சென்னை ரசிகர்கள்: பாராட்டும் கிரிக்கெட் ஆர்வலர்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் இன்றைய ஆட்டத்திற்கு சென்னை ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் இன்றைய ஆட்டத்திற்கு சென்னை ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 7  விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை ரசிகர்கள் கரவொலிகள் எழுப்பி தங்களது ஆதரவைத் தெரிவித்தது பலரையும் கவர்ந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு சாதமான தருணங்களில் சென்னை ரசிகர்கள் ஆர்ப்பரித்து தங்களது ஆதரவை அந்த அணிக்குத் தெரிவித்தனர். மேலும் மைதானத்தில் பாகிஸ்தான் அணியின் ஆடைகளை அணிந்து வந்த சென்னை ரசிகர்கள் பரபரப்பான நிமிடங்களில் அந்த அணிக்கு ஆதரவான தங்களது முழக்கங்களை எழுப்பினர். இது பாகிஸ்தான் ரசிகர்களை நெகிழச் செய்தது. 

கடந்த முறை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் ஆட்டத்தின்போது ரசிகர்கள் பலரும் அந்த அணியின் வீரர்களுக்கு எதிராக ஜெய்ஸ்ரீ ராம் என முழங்கினர். இது நாடு முழுவதும் சர்சையான நிலையில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். 

இந்நிலையில் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளித்தது குறித்து விளையாட்டு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.