கே.எல்.ராகுல் அணியுடன் இணைவது அணியை சமபலத்துடன் முழுமையானதாக மாற்றும் என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கே.எல்.ராகுல் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்தார். தற்போது, அவர் முழுமையாக குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் விளையாடுவர் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்த நிலையில், கே.எல்.ராகுல் அணியுடன் இணைவது அணியை சமபலத்துடன் முழுமையானதாக மாற்றும் என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளார். அவரது வருகை இந்திய அணியை சமபலத்துடன் கூடிய முழுமையான அணியாக மாற்றும் என உணர்கிறோம். கே.எல்.ராகுல் பெங்களூருவில் உள்ள முகாமில் பயிற்சி செய்து வருகிறார். கடந்த இரண்டு நாள்களில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இரண்டு ஆட்டங்கள் விளையாடியுள்ளார். அணியில் இஷான் கிஷனும் இடம் பெற்றுள்ளார். அணியில் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருப்பது அணியை பலமிக்கதாக்கியுள்ளது. கடந்த சில ஆட்டங்களில் இஷான் கிஷன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பொருத்தவரையில், இந்திய அணிக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. அவர்கள் இருவரில் நாங்கள் சிறப்பாக செயல்படுபவரை அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு தேர்வு செய்வோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.