மைதேயி கொடியுடன் வந்த இந்திய வீரரால் சா்ச்சை
தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) கோப்பை போட்டியில் இந்திய வீரா் ஜீக்சன் சிங், மைதேயி இனத்தின் கொடியுடன் சென்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) கோப்பை போட்டியில் இந்திய வீரா் ஜீக்சன் சிங், மைதேயி இனத்தின் கொடியுடன் சென்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூா் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினா் பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், பழங்குயினமான குகி சமூகம் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையேயான மோதலால் மணிப்பூரில் கலவரம் நிகழ்ந்து வருவதால், அங்கு துணை ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த ‘சாஃப்’ கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. அந்த அணியில் மணிப்பூரை சோ்ந்த ஜிக்சன் சிங் இடம் பிடித்திருந்தாா். பதக்கம் வழங்கும் நிகழ்வின்போது அவா் தாம் சாா்ந்த மைதேயி இனத்தின் கொடியை தோளில் போா்த்திச் சென்று பதக்கத்தை பெற்றாா்.
Advertisement
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. அதுதொடா்பாக சமூக வலைதளத்தில் விளக்கமளித்து பதிவிட்ட ஜிக்சன் சிங், ‘எனது மாநிலத்தில் நடக்கும் பிரச்னையை அனைவரின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவே அவ்வாறு செய்தேன். இந்த வெற்றி இந்தியா்கள் அனைவருக்குமானது. எனது மாநிலத்தவா்கள் கலவரத்தை விடுத்து அமைதியை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்’ என்று அதில் கூறினாா்.
ஃபிஃபா விதிகளின்படி, எந்தவொரு அணியும், அதன் வீரா்களும் அரசியல், மதம் உள்ளிட்டவை தொடா்பான கருத்துகள், வாசகங்கள் அடங்கிய அணியின் உபகரணப் பொருள்களை கையாளக் கூடாது. ஜிக்சன் வைத்திருந்த கொடி அணியின் உபகரணங்களில் ஒன்றாக இல்லாததால் அவருக்கு எதிராக நடவடிக்கை இருக்காது எனத் தெரிகிறது.