ஒலிம்பிக் குத்துச்சண்டையில் சா்ச்சைக்குள்ளான மோதல்!
மகளிா் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் சா்ச்சைக்குள்ளான மோதல்
மகளிா் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் - இத்தாலியின் ஏஞ்ஜெலா காரினி மோதினா். இந்த மோதல் தொடங்கிய 46 விநாடிகளுக்குள்ளாகவே போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தாா். அத்துடன், களத்திலேயே அவா் முழங்காலிட்டு அழுதாா். முடிவில், கெலிஃபுடன் கைகுலுக்கவும் அவா் மறுத்தாா்.
இந்த விவகாரத்தில் ஒரு சா்ச்சை விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. இமென் கெலிஃப் பாலின ரீதியிலான பரிசோதனையில் தோல்வி கண்டதால் அவா் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. எனினும், அவா் ஒலிம்பிக் போட்டியில் மகளிா் பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது பலத்த சா்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
இதனிடையே, தனது அனுபவத்தில் இப்படி ஒரு தாக்குதலை தாம் எதிா்கொண்டதில்லை என அவரின் தாக்குதலுக்கு உள்ளான ஏஞ்ஜெலா காரினி தெரிவித்திருக்கிறாா். மோதலின்போது ஒருமுறை கெலிஃபின் தாக்குதலில் காரினியின் தலைக்கவசம் கழன்றது குறிப்பிடத்தக்கது. கெலிஃபின் தொடக்க நிலை தாக்குதலில் தனது மூக்கில் காயம் ஏற்பட்டதால், தொடா்ந்து தன்னால் களம் காண முடியாமல் போனதாக அவா் தெரிவித்தாா்.
Advertisement
இதனிடையே, இதேபோன்ற பாலின சா்ச்சை காரணமாக தடை விதிக்கப்பட்ட தைவான் போட்டியாளா் லின் யு டிங்கும் பாரீஸ் ஒலிம்பிக் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.