பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை ‘ஹைபிரிட்’ முறையில் நடத்துவது இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா விளையாடும் ஆட்டங்கள் துபையில் நடைபெறவுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், போட்டி தொடா்பாக உறுதியற்ற நிலை இருந்தது.
இந்நிலையில், ஐசிசி வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறுகையில், ‘ஐசிசி தலைவா் ஜெய் ஷா, பாகிஸ்தான் உள்பட ஐசிசியின் இயக்குநா் குழு உறுப்பினா்கள் இடையே அதிகாரப்பூா்வமற்ற சந்திப்பு துபையில் உள்ள ஐசிசி தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை ஹைபிரிட் முறையில், பாகிஸ்தான் மற்றும் அமீரகத்தில் நடத்த அனைத்து தரப்பினராலும் கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதன்படி, இந்தியா தனது ஆட்டங்களை துபையில் விளையாடும். இதற்கு பாகிஸ்தான் இழப்பீடு கோரியுள்ள நிலையில், அது பரிசீலனையில் உள்ளது.
அதேபோல், வரும் 2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐசிசி போட்டிகளிலும், இந்தியா இணைந்து நடத்தும் போட்டிகளிலும் இதே ஹைபிரிட் முறையை கையாள பாகிஸ்தான் முன் வைத்த கோரிக்கைக்கு ஐசிசி ஒப்புதல் அளித்தது. இதன்படி, பாகிஸ்தானின் ஆட்டங்கள் யாவும் பொதுவான இடத்தில் நடைபெறும்.
முன்னதாக 2031 வரை இந்த ஏற்பாட்டைச் செய்யுமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த நிலையில், 2027 வரை அதைச் செய்ய ஐசிசி ஒப்புக் கொண்டது. 2026-இல் இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, பாகிஸ்தான் தனது ஆட்டங்களை இலங்கையில் விளையாடும்’ என்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.