ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் குவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று (ஜனவரி 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசலங்கா 101 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக கேப்டன் குஷல் மெண்டிஸ் 46 ரன்களும், சமரவிக்கிரம 41 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் நிகரவா, முஷர்பானி மற்றும் ஃபராஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சிக்கந்தர் ராஸா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.