ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருது இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கான போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை மையா பௌச்சியர் மற்றும் இலங்கை வீராங்கனை விஸ்மி குணரத்னே இடம்பெற்ற நிலையில், ஸ்மிருதி மந்தனா விருதினை தட்டிச் சென்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் முறையாக ஸ்மிருதி மந்தனா விருது வென்றுள்ளார்.
27 வயதாகும் ஸ்மிருதி மந்தனா உலகின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசி அசத்தினார். முதல் ஒருநாள் போட்டியில் 113 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 136 ரன்களும் எடுத்தார். மூன்றாவது போட்டியில் 90 ரன்கள் எடுத்தார்.
அவரது சிறப்பான ஆட்டம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 161 பந்துகளில் 149 ரன்கள் குவித்து அசத்தினார் ஸ்மிருதி மந்தனா. அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்ற ஸ்மிருதி மந்தனா பேசியதாவது: ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி செயல்பட்ட விதம் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அணிக்கு தொடர்ச்சியாக எனது பங்களிப்பை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.