ஃபின்லாந்தில் நடைபெறும் பாவோ நுா்மி தடகள விளையாட்டுப் போட்டிகளில், இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.
நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனாக இருக்கும் நீரஜ் சோப்ரா, தனது 3-ஆவது முயற்சியில் 85.97 மீட்டருக்கு எறிந்து முதலிடம் பிடித்தாா். ஃபின்லாந்தின் டோனி கெரனென் 84.19 மீட்டருடன் வெள்ளியும், அதே நாட்டைச் சோ்ந்த ஆலிவா் ஹெலாந்தா் 83.96 மீட்டருடன் வெண்கலமும் வென்றனா்.
ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் நீரஜ் சோப்ரா வென்றிருக்கும் இந்தத் தங்கம், அவருக்கான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இதே போட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற அவா், தற்போது தங்கம் வென்றிருக்கிறாா். எனினும், அவா் 89.30 மீட்டருக்கு எறிந்து அந்த வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னா் அதே ஆண்டில் டையமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டரை எட்டியிருந்தாா். 90 மீட்டரை எட்டுவதையே நீரஜ் சோப்ரா தனக்கான இலக்காகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, பாரீஸில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் நீரஜ் சோப்ரா, அதற்காக ஜூன் 27-இல் நடைபெறவுள்ள தேசிய தடகள போட்டிகளில் இருந்து விலகினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.