பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் இருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இளைஞர்கள் பலரும் பந்துவீச்சில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 250 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர் 8 முறை குவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளங்களும், இம்பாக்ட் பிளேயர் விதிமுறையும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதன்காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் அதிகமான ரன்கள் குவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பந்துவீச்சாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், ஐபிஎல் தொடரில் மைதானங்களின் எல்லைக் கோட்டினை (பவுண்டரி) அதிகப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலானதாக உள்ளது. அதிலும் ஐபிஎல் தொடரின் முதல் பாதி மிகுந்த கடினமானதாக இருந்தது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் ஒவ்வொரு ஆடுகளங்களின் எல்லைக்கோடுகளும் அதிகப்படுத்த வேண்டும் என உறுதியாக நம்புகிறேன். இதனால் மைதானத்தில் உள்ள சில இருக்கைகள் குறையும் என்பது தெரியும். இருந்தாலும் பரவாயில்லை.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்குமே ஏற்றதாக போட்டி இருக்க வேண்டும். பேட்டிங்குக்கு சாதகமான சூழல் நீடித்தால், இளைஞர்கள் பந்துவீச்சாளராக உருவாக தயாராக இருக்க மாட்டார்கள். அனைவரும் பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என விரும்புவார்கள். ஆட்டத்துக்கு பந்துவீச்சாளர்களும் முக்கியம். பந்துவீச்சாளர்கள் எண்ணிக்கை சமமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்துக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.