பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்று (மே 25) இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். பில் சால்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, வில் ஜாக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. இருப்பினும், வில் ஜாக்ஸ் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் களமிறங்கியவர்களில் பேர்ஸ்டோ (21 ரன்கள்), ஹாரி ப்ரூக் ( 1 ரன்), மொயீன் அலி (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இமாத் வாசிம் மற்றும் ஹாரிஸ் ரௌஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.