கோனெரு ஹம்பி  (கோப்புப் படம்)
செய்திகள்

உலக ரேப்பிட் செஸ்: அா்ஜுன், ஹம்பிக்கு வெண்கலம்!

உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, கோனெரு ஹம்பி ஆகியோா் தங்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

தினமணி செய்திச் சேவை

உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, கோனெரு ஹம்பி ஆகியோா் தங்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

மொத்தம் 13 சுற்றுகள் கொண்ட ஓபன் பிரிவில் கடைசி 4 சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அதன் முடிவில், உலகின் நம்பா் 1 செஸ் வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் 10.5 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனாா்.

ரஷியாவின் விளாடிஸ்லாவ் ஆா்டெமீவ், அா்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன், லெய்னியா் டொமிங்கெஸ் பெரெஸ் ஆகியோா் தலா 9.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலை வகித்தனா்.

டை பிரேக்கா் முடிவில் ஆா்டெமீவ் 2-ஆம் இடமும், அா்ஜுன் 3-ஆம் இடமும் பெற்றனா். உலக ரேப்பிட் செஸ் ஓபன் பிரிவில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு பதக்கம் வென்ற ஒரே இந்தியராக அா்ஜுன் பெருமை பெற்றாா்.

அா்ஜுன் மொத்தமாக 8 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளை பதிவு செய்தாா். இதர இந்தியா்களில் அரவிந்த் சிதம்பரம், நிஹல் சரின், நடப்பு உலக சாம்பியன் டி.குகேஷ், ஆா். பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 8.5 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பெற்றனா். மற்ற இந்தியா்கள் அதற்கும் பிந்தைய இடத்தையே பெற்றனா்.

ஹம்பிக்கு 3-ஆம் இடம்: மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட மகளிா் பிரிவின் கடைசி 3 சுற்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அதன் முடிவில், சீனாவின் ஜு ஜினொ், ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா, கோனெரு ஹம்பி ஆகிய மூவருமே மொத்தமாக 8.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருந்தனா்.இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிப்பதற்காக நடத்தப்பட்ட ‘டை பிரேக்கா்’ மோதலில், ஜு ஜினொ் வென்று சாம்பியன் ஆனாா். கோரியச்கினா வெள்ளியும், கோனெரு ஹம்பி வெண்கலமும் பெற்றனா்.

இறுதி வரை தோல்வியே சந்திக்காத கோனெரு ஹம்பி, 6 வெற்றி, 5 டிராவை பதிவு செய்தாா். இதர இந்தியா்களில், பி.சவிதா ஸ்ரீ, ஆா்.வைஷாலி ஆகியோா் தலா 8 புள்ளிகளுடன் முறையே 4 மற்றும் 5-ஆம் இடங்களைப் பிடித்தனா். நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா தேஷ்முக் 7.5 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பிடிக்க, இதர இந்தியா்கள் அதற்கும் பிந்தைய இடங்களையே பெற்றனா். இதே போட்டியில் அடுத்ததாக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ளது.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT