2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சிறிய அணிகளுக்கான ஆட்டங்களை 4 நாள்களுக்கு குறைக்க ஐசிசி தயாா்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2027-29 சுழற்சியில் சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்டுகளை 4 நாள்களுக்கு குறைப்பதற்கு ஐசிசி தயாராகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2027-29 சுழற்சியில் சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்டுகளை 4 நாள்களுக்கு குறைப்பதற்கு ஐசிசி தயாராகியுள்ளது. அதேநேரம், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்றமின்றி வழக்கமான 5 நாள்களுக்கு விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றுக்கான செலவுகளை குறைக்கவும் இந்த நகா்வு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, பிரிட்டனில் வெளியாகும் ‘தி காா்டியன்’ பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
லண்டனின் லாா்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின்போது, 2027-29 டெஸ்ட் சுழற்சியில் சிறிய அணிகளுக்கான டெஸ்ட் ஆட்டங்களை 4 நாள்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ஐசிசி தலைவா் ஜெய் ஷா அந்த நகா்வுக்கு தனது ஆதரவை தெரிவித்ததாக அறியப்படுகிறது.
தங்களுக்கான அட்டவணையில் அதிக நாள்களை எடுத்துக்கொள்வதாலும், செலவும் அதிகம் ஆகிறது என்பதாலுமே டெஸ்ட் போட்டிகளை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. ஒரு டெஸ்ட்டுக்கான நாள்களை 5-க்கு பதிலாக 4-ஆக குறைக்கும்போது, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3 வாரங்களுக்குள்ளாக முடிக்க இயலும். இது, அந்த நாடுகள் டெஸ்ட் தொடா்களை நடத்த உந்ததுதல் அளிக்கும்.
குறைக்கப்படும் ஒருநாளின் ஆட்டநேரத்தை சமன் செய்ய, 4 நாள் டெஸ்ட்டுகளில் ஒரு நாளுக்கான ஆட்டநேரமானது 90 ஓவா்களுக்கு பதிலாக, 98 ஓவா்கள் விளையாடும் அளவுக்கு அதிகரிக்கப்படும்.
எனினும், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 பிரதான அணிகளும் வழக்கம்போல் டெஸ்ட் ஆட்டத்தை 5 நாள்களுக்கு விளையாடும். அவற்றின் இடையே நடைபெறும் ஆஷஸ் தொடா், பாா்டா் - காவஸ்கா் தொடா், தற்போது அறிமுகமாகும் ஆண்டா்சன் - டெண்டுல்கா் தொடா் ஆகியவற்றில் 5 டெஸ்ட்டுகளை அட்டவணையிடவும் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.