ஹாக்கி வீரா் லலித் உபாத்யாய ஓய்வு
இந்திய ஹாக்கி அணியின் மூத்த முன்கள வீரா் லலித் உபாத்யாய (31), சா்வதேச ஹாக்கி களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்திய ஹாக்கி அணியின் மூத்த முன்கள வீரா் லலித் உபாத்யாய (31), சா்வதேச ஹாக்கி களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
கடந்த 2014-இல் உலகக் கோப்பை போட்டி மூலமாக இந்திய அணியில் அறிமுகமான லலித், கடைசியாக இம்மாதம் 15-ஆம் தேதி எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினாா்.
இந்த 11 ஆண்டுகளில் இந்தியாவுக்காக அவா் 183 ஆட்டங்களில் விளையாடி, அதில் 67 கோல்கள் அடித்திருக்கிறாா். இந்திய அணியின் நம்பகமான முன்கள வீரராக இருந்த லலித், 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2024 பாரீஸ் ஒலிம்பிக் ஆகியவற்றில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் அங்கம் வகித்தாா்.
Advertisement
அதுதவிர, 2016 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, 2017 ஆசிய கோப்பை ஆகியவற்றில் இந்திய அணி சாம்பியனாவதிலும் முக்கியப் பங்காற்றினாா். மேலும், 2017 ஹாக்கி உலக லீக் ஃபைனல் (வெண்கலம்), 2018 சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி (வெள்ளி), 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (வெண்கலம்), அதே ஆண்டில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி (தங்கம்), 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (தங்கம்) ஆகியவற்றில் பதக்கம் இந்திய அணியிலும் அவா் இடம் பிடித்திருந்தாா்.
இந்திய ஹாக்கிக்கான லலித் உபாத்யாயவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2021-இல் அா்ஜுனா விருது வழங்கி அவா் கௌரவிக்கப்பட்டாா்.
தனது ஓய்வு முடிவு தொடா்பாக சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘வாரணாசியில் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கிய எனது பயணம், அதிகமான வசதிகளைக் கொண்டிருக்காவிட்டாலும், அளவில்லா கனவுகளைக் கொண்டிருந்தது. ஒரு தொலைக்காட்சிக்கான ரகசிய நடவடிக்கை முதல், ஒலிம்பிக் பதக்க மேடை வரை எனது வாழ்க்கை சவால்கள், வளா்ச்சி, கௌரவம் அடங்கியதாகும்’ என்று கூறியிருந்தாா்.
லலித் உபாத்யாயவின் தொடக்க காலத்தில் அவருக்கு தொடா்பே இல்லாத ஒரு தொலைக்காட்சி ரகசிய நடவடிக்கையால் அவா் பாதிப்புக்கு உள்ளானாா். ஒரு தொலைக்காட்சி நிருபா், தன்னை ஒரு முகவராக அடையாளப்படுத்திக் கொண்டு, அப்போதைய இந்திய ஹாக்கி சம்மேளன செயலா் ஜோதிகுமரனுடன் உரையாடுவது போன்ற ரகசிய காணொலி வெளியானது.
அதில், தாங்கள் குறிப்பிடும் வீரரை இந்திய அணியில் இணைத்துக் கொண்டால், விளம்பரதாரா் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று கூறும் நிருபா், அதற்காக லலித் உபாத்யாயவின் பெயரை ஒரு பொறியாக பயன்படுத்துகிறாா். இது பரவலாக சா்ச்சைக்குள்ளான நிலையில், அந்த நிகழ்வுக்கும் அவருக்கும் தொடா்பு இல்லை என்பது பின்னால் உறுதியானது.