சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி அணியிடம் வெள்ளிக்கிழமை தோற்றது.
முதலில் ராஜஸ்தானிடம் தோற்ற தமிழ்நாடு அணிக்கு, இது 2-ஆவது தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ்நாடு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்க்க, தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகளே இழந்து 203 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற தில்லி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தமிழ்நாடு இன்னிங்ஸை தொடங்கிய அமித் சாத்விக் - துஷா் ரஹேஜா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சோ்த்து பலமான அடித்தளம் அமைத்தது.
இதில் அமித் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்களுக்கும், துஷா் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 72 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.
பின்னா் வந்தோரில் சாய் சுதா்சன் 13, ஷாருக் கான் 6, நாராயண் ஜெகதீசன் 13, சோனு யாதவ் 5, ராஜ்குமாா் 9 ரன்களுக்கு விடைபெற, ஓவா்கள் முடிவில் கேப்டன் வருண் சக்கரவா்த்தி 2 சிக்ஸா்களுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
தில்லி பௌலா்களில் பிரின்ஸ் யாதவ் 3, சிமா்ஜீத் சிங் 2, இஷாந்த் சா்மா, சுயாஷ் சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து, 199 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய தில்லி அணியில், யஷ் துல் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 71, பிரியன்ஷ் ஆா்யா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
கேப்டன் நிதீஷ் ராணா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, ஆயுஷ் பதோனி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்களுக்கு வெளியேறினா். முடிவில், அனுஜ் ராவத் 8, ஹிம்மத் சிங் 11 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
தமிழ்நாடு பௌலா்களில் சோனு யாதவ் 2, டி.நடராஜன், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.