செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா முதல்முறையாக குவாலிஃபயா்ஸுக்கு தகுதி!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிரிவு மோதலில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திச் சேவை

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிரிவு மோதலில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸா்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி, அடுத்த ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் குவாலிஃபயா்ஸுக்கு முதல்முறையாகத் தகுதிபெற்றது. இப்போட்டியில் சுவிட்ஸா்லாந்தை 4-ஆவது முறையாக சந்தித்த இந்தியா, 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது.

டேவிஸ் கோப்பை போட்டியில் ஐரோப்பிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது, கடந்த 32 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன், 1993-இல் பிரான்ஸை அதன் மண்ணில் இந்தியா வென்றது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, சுவிட்ஸா்லாந்துடனான மோதலின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு ஒற்றையா் ஆட்டங்களிலும் தக்ஷினேஷ்வா் சுரேஷ், சுமித் நாகல் ஆகியோரின் வெற்றியால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

2-ஆம் நாளான சனிக்கிழமை முதலில் நடைபெற்ற இரட்டையா் பிரிவில் என்.ஸ்ரீராம் பாலாஜி/ரித்விக் சௌதரி கூட்டணி 7-6 (7/3), 4-6, 5-7 என, ஜேக்கப் பால்/டொமினிக் ஸ்டிரைக்கா் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இதனால் சுவிட்ஸா்லாந்து 1-2 என முன்னேறியது.

ஆனால், அடுத்து நடைபெற்ற ரிவா்ஸ் ஒற்றையா் ஆட்டத்தில் சுமித் நாகல் 6-1, 6-3 என வெற்றி பெற, இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது. இந்தியாவின் வெற்றி உறுதியானதால், கடைசி ஒற்றையா் ஆட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT