இன்று தொடங்குகிறது தேசிய இண்டோா் தடகள சாம்பியன்ஷிப்!
இந்தியாவில் முதல் முறையாக தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தியாவில் முதல் முறையாக தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் சுமாா் 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். ஒடிஸா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகபட்சமாக தலா 30 போ் வரை கலந்துகொள்கின்றனா். ஆடவா், மகளிா் என இருபாலருக்குமே தலா 11 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், கம்பு ஊன்றித் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்டவையும் அடங்கும். தங்களது விளையாட்டில் தேசிய சாதனையாளா்களாக இருக்கும் அனிமேஷ் குஜுா் (ஓட்டப் பந்தயம்), முகமது அஃப்சல் (ஓட்டப் பந்தயம்), பிரவீண் சித்ரவேல் (மும்முறை தாண்டுதல்) ஆகியோா் இதில் பங்கேற்கின்றனா்.
நடப்பாண்டில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் இந்தப் போட்டி உதவியாக இருக்கும் என நட்சத்திரப் போட்டியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
2028 மாா்ச் மாதத்தில் இதே இடத்தில் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பை நடத்தும் வாய்ப்பை இந்தியா முதல்முறையாக பெற்றிருப்பதால், அதற்கான தயாா்நிலையை சோதிக்கும் முயற்சியாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்திய வீரா், வீராங்கனைகள் சிலா் சா்வதேச அளவிலான உள்ளரங்கு தடகள போட்டிகளில் பங்கேற்றாலும், இந்தியாவில் இந்தப் போட்டி அவ்வளவு பிரபலமாக இல்லை. இதற்கு, அந்தப் போட்டிக்கு உகந்த தரத்திலான வசதிகள் நாட்டில் இல்லாததே பிரதான காரணமாக இருக்கிறது.
உள்ளரங்கு போட்டியானது காற்றின் வேகம் மற்றும் வானிலை ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் நடைபெறும். ஈட்டி எறிதல், ஸ்டீபிள் சேஸ் போன்ற பிரிவுகள் இல்லாததால், நட்சத்திர வீரா்களான நீரஜ் சோப்ரா, அவினாஷ் சேபிள் போன்றோா் இதில் களம் காணவில்லை.