புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய சிலம்பம் சாம்பியஷன்ஷிப் போட்டியில் நாகை மாணவா் தங்கப்பதக்கம் வென்றாா்.
அகில இந்திய சிலம்ப சம்மேளனம் சாா்பில் 13-ஆவது தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, புதுச்சேரி ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நாட்டின் 13-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த 450-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
போட்டியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் சுரேஷ்ராஜா 90 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றாா். முடிவில், மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், புதுச்சேரி இரண்டாம் இடத்தையும், மேற்குவங்கம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி பங்கேற்று, வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
ஏற்பாடுகளை, சிலம்ப சம்மேளனத் தலைவா் கேப்டன் பிரதீப் ஆா். ராஜே, செயலா் அழகிரி, பொருளாளா் ரவிச்சந்திரன், தலைமை தொழில்நுட்ப இயக்குநா் விஜய் பாபு, தலைமை போட்டி இயக்குநா் சுந்தா், புதுச்சேரி சங்கத்தின் தலைவா் ஸ்டாலின் ஆகியோா் செய்திருந்தனா்.