காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!
தமிழக வீரர் காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்றது குறித்து...
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்றார்.
இந்தியாவிலேயே அதிகளவு செஸ் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில் மேலும் ஒரு மகுடம் சூடப்பட்டுள்ளது.
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மே 16 முதல் 26ஆம் தேதிகள் வரை நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மாலத்தீவுகள், பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து, கனடா நாட்டில் இருந்து வீரர்கள் பங்கேற்றார்கள்.
Advertisement
Advertisement
கிளாசிக்கல், பிளிட்ஸ், ரேபிட் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஓபன் பிரிவில் 96 பேர் கலந்துகொண்டார்கள்.
மொத்தம் 7 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வம் 6.5 புள்ளிகள் பெற்று பிளிட்ஸ், ரேபிட் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார்.
மற்றுமொரு தமிழக வீரர் ஸ்ரீஹரி ரேபிட் பிரிவில் வெள்ளி வென்றார். இந்திய வீரர் மித்ரபா வெண்கலம் வென்றார்.
பிளிட்ஸ் பிரிவில் ரோஹித் கிருஷ்ணா வெள்ளியும் ஸ்ரீஹரி வெண்கலமும் வென்றார்கள்.
கிளாசிக்கல் பிரிவில் இந்திய வீரர் மித்ரபா தங்கமும், இலங்கை வீரர் இரனிந்து தில்சான் லியனகே வெள்ளியும் ஸ்ரீஹரி வெணலமும் வென்றார்கள்.