நார்வே செஸ்: உலக சாம்பியனை வீழ்த்திய இந்தியாவின் திவ்யா தேஷ்முக்!
நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் உலக செஸ் சாம்பியனைத் தோற்கடித்தார்.
நார்வே செஸ் தொடரில் உலக செஸ் சாம்பியனைத் தோற்கடித்தார் இந்தியாவின் திவ்யா தேஷ்முக்.
உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், செஸ் தொடர்களிலேயே மதிப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது, செஸ் உலகின் விம்பிள்டன் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான தொடர் மே 25 தொடங்கி ஜூன் 10 அன்று முடிவடைகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 6 பேர், பெண்கள் பிரிவில் 6 பேர் என மொத்தம் 12 பேர் பங்குபெற்றுள்ள நிலையில் குகேஷ், பிரக்யானந்தா, கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் என இந்தியாவிலிருந்து 4 வீரர்கள் விளையாடுகின்றனர்.
Advertisement
Advertisement
நார்வே செஸ் தொடரில் முதல்முறை கலந்துகொள்ளும் 20 வயதேயான திவ்யா தேஷ்முக், சீனாவைச் சேர்ந்த உலக சாம்பியனான ஜூ வென்ஜூன் உடன் முதல் போட்டியை சமன் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் அவருடன் விளையாடிய இரண்டாவது போட்டியில் ஜூ வென்ஜூனை தோற்கடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நார்வே செஸ் தொடரில் திவ்யா பதிவு செய்துள்ள முதல் வெற்றி இதுவாகும். கருப்பு காய்களில் நெருக்கடியுடன் விளையாடி அவர் பெற்றுள்ள இந்த வெற்றியானது சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆண்கள் பிரிவில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோ உடன் விளையாடிய பிரக்யானந்தா மற்றும் ஜெர்மன் வீரர் வின்செண்ட் கெய்மர் உடன் விளையாடிய குகேஷ் நேற்று நடைபெற்ற போட்டியில் சமன் செய்திருந்த நிலையில் இன்று இருவரும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர்.
மற்றொரு இந்திய வீரரான கோனேரு ஹம்பி முதல் போட்டியில் கஜகஸ்தானின் பிபிசராவிடம் தோல்விய்டைந்தார்.
இந்தத் தொடரில் மிகவும் அதிர்ச்சிகரமாக நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் உலக செஸ் ஜாம்பவானான மாக்னஸ் கார்ல்சன் ஈரானிய - ஃபிரெஞ்ச் செஸ் வீரர் அலிரெஸா ஃபிரோஜாவிடம் தோல்வியடைந்தார்.
பல திருப்புமுனைகளுடன் சிறப்பான ஆட்டத்தை செஸ் வீரர்கள் வெளிப்படுத்தி வந்தாலும், திவ்யா தேஷ்முக் தனது முதல் தொடரிலேயே உலக சாம்பியனைத் தோற்கடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அடுத்தடுத்தப் போட்டிகளில் அவரது ஆட்டத்தை செஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.