பிரக்ஞானந்தாவால் இந்தியாவுக்குப் பெருமை: பிரதமர் மோடி, அமித் ஷா பாராட்டு!
நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்து
புது தில்லி : நார்வே செஸ் பட்டம் வென்ற தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தாவை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சனிக்கிழமை (ஜூன் 6) பாராட்டினர்.
நார்வே செஸ் போட்டியின் பத்தாவது சுற்று நேற்றிரவு நடைபெற்றது. இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மர் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் மோதினர். பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி மொத்தம் 18 புள்ளிகளுடன் இத்தொடரை வென்றார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
உலகின் முன்னணி செஸ் வீரர்கள் களம் கண்ட நார்வே செஸ் போட்டியில் மகுடம் சூடியதன்மூலம், நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவுக்கு சேர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பிரக்ஞானந்தாவைப் பாராட்டி அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடகத் தளப் பதிவில், “முழு மனதுடனான அர்ப்பணிப்பு, அறிவாற்றலான நகர்வுகள் மற்றும் அற்புதமான யோசனைகளால் ஈட்டிய வெற்றியின்மூலம், நீங்கள் நாட்டை பெருமைப்படுத்திவிட்டீர்கள். தாய்நாட்டுக்கு மேலும் மகுடங்களை ஈட்டுவதன் மூலம் நமது இளையோருக்கு உத்வேகமளிப்பதை நீங்கள் தொடருங்கள். நார்வே செஸ் சாம்பியன் 2026 மகுடம் சூடியதற்கு பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியமைக்காக பிரக்ஞானந்தாவுக்குப் பாராட்டுகள்! இதுவொரு வியத்தகு மைல்கல். அதன்மூலம், அவரது தொடர் திறமை வெளிப்பாடாகிறது. அவரது வருங்கால சாதனைகளுக்காக எமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Praggnanandhaa winning Norway Chess - Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah on Saturday congratulated R Praggnanandhaa
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.