ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய (புதன்கிழமை) 2-வது ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்த முறை கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவே களமிறங்கினர்.
கடந்த இரு ஆட்டங்களைப்போல் அல்லாமல் இம்முறை தொடக்கம் முதலே அதிரடி காட்டத் தொடங்கியது ராகுல், ரோஹித் இணை. ஹமித் ஹாசன் மட்டும் கட்டுப்படுத்தினார். பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, நடு ஓவர்களில் ரன் ரேட் உயராமல் சீராக சென்றுகொண்டிருந்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா 37-வது பந்திலும், ராகுல் 35-வது பந்திலும் அரைசதத்தை எட்டினர்.
பின்னர் அதிரடிக்கு மாற, ரஷித் கான் ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்தன. இதனால், ரன் ரேட் மீண்டும் ஓவருக்கு 9.5 ஐ தாண்டியது.
முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ராகுல் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
21 பந்துகளே மீதமிருந்த நிலையில் முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ரிஷப் பந்த் மற்றும் ஹார்திக் பாண்டியா களத்தில் இருந்தனர். இருவரும் போட்டிபோட்டு சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர்.
இதனால், இந்திய அணிக்கு 17-வது ஓவரில் 15 ரன்கள், 18-வது ஓவரில் 15 ரன்கள், 19-வது ஓவரில் 19 ரன்கள் மற்றும் கடைசி ஓவரில் 16 ரன்கள் கிடைத்தன.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பந்த் 13 பந்துகளில் 27 ரன்களும், பாண்டியா 13 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர்.