சென்னை, ஜூன் 24: சென்னை மற்றும் புறநகருக்குள் நுழையும் வாகனங்களைக் கண்காணிக்கவும், பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் நவீன வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, இந்த மையங்களில் 8 அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவினால் எந்தக் கண்காணிப்பையும் சரியாகச் செய்ய முடியாது என்று உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, சென்னை நகரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து காவல்துறை செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள நுழைவு வாயில்களில் நவீன முறையில் 20 வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையமும் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் ரூ. 1 லட்சம் செலவில் வாகனங்களைக் கண்காணிக்கவும், பயங்கரவாதிகள் ஊருடுவலைத் தடுக்கவும் 360 டிகிரியில் இயங்கும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா பொருத்தும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 11 இடங்களிலும், சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட 9 இடங்களிலும் இந்த சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில சோதனைச் சாவடி மையங்களின் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன.
எந்த இடங்களில்? சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட வேளச்சேரி, தரமணி-வேளச்சேரி சாலையில் எஸ்ஆர்பி டூல்ஸ் அருகில், விருகம்பாக்கம் சோதனைச் சாவடி மையம், கோயம்பேடு சோதனைச் சாவடி மையம், திருவொற்றியூர் எம்.ஆர்.எஃப். சோதனைச் சாவடி மையம், ரெட்டேரி உள்வட்டச் சாலை ராஜமங்கலம் வாகன சோதனைச் சாவடி மையம் ஆகிய 6 மையங்கள் அமைக்கும் பணி முற்றிலும் முடிந்துவிட்டது.
செம்மஞ்சேரி உள்ளிட்ட இதர சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் கம்ப்யூட்டர் வசதி, போலீஸôர் தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெறும் 8 அடி உயரத்தில் கேமரா: சென்னை நகருக்கு உள்ளே நுழையும் வாகனங்களை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அமைக்கப்பட்ட இந்த சோதனைச் சாவடி மையங்களில் கேமரா வெறும் 8 அடி உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடி மையங்கள் சாலையை விட்டு 15 அடி தூரத்தில் அமைந்துள்ளன.
20 அடி உயர கம்பம் தேவை: ""குறைந்த உயரத்தில் கேமரா பொருத்தியிருப்பதால், வாகனங்களையும், நபர்களையும் முழு அளவில் கண்காணிக்க முடியாது. மேலும், இந்தச் சுழலும் கேமரா சுமார் 20 அடி உயர கம்பத்தில் பொருத்தியிருக்க வேண்டும். சாலையின் ஓரத்தில் கம்பம் பொருத்தி, அதில் கேமராவைப் பொருத்தி இருந்தால் மட்டுமே நான்கு புறத்தையும் முழுமையாகக் கண்காணிக்க முடியும். எனவே, சோதனைச் சாவடி மையங்களில் பொருத்தியுள்ள கேமராவை அகற்றிவிட்டு, சாலை ஓரத்தில் 20 அடி உயர கம்பத்தில் நிறுவி கேமராவை பொருத்த கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறைந்த உயரத்தில் கேமரா பொருத்தியுள்ள சோதனைச் சாவடி மையங்கள் மேற்கொண்டு பணிகள் எதுவும் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.