ரேஷன் கார்டு பெறாததால் நலத் திட்ட உதவிகள் கிடைக்காத நிலை
செஞ்சி, அக்.25: ரேஷன் கார்டு பெறாததால் அரசின் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைக்காமல் செஞ்சி சோகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 37 இருளர் குடும்பத்தினர் உள்பட 61 குடும்பத்தினர் உள்ளனர். செஞ்சி வட்டம் சோக
செஞ்சி, அக்.25: ரேஷன் கார்டு பெறாததால் அரசின் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைக்காமல் செஞ்சி சோகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 37 இருளர் குடும்பத்தினர் உள்பட 61 குடும்பத்தினர் உள்ளனர்.
செஞ்சி வட்டம் சோகுப்பம் கிராமத்தில் 2,280 பேர் வசிக்கின்றனர். இதில் 37 இருளர் குடும்பங்கள் உள்ளிட்ட 61 குடும்பங்கள் இதுவரை ரேஷன் கார்டை பெறவில்லை. இவர்களுக்கு ரேஷன் கார்டு எப்படி இருக்கும் என்று கூட தெரியாத நிலையில் உள்ளனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட இருளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாமல் உள்ளது. 40 வயதை தாண்டிய நிலையிலும் சிலர் இதுவரை வாக்களித்ததே இல்லை என்று தெரிவித்தனர்.
மேலும் இருளர்கள் வாழ்வதற்காக சிமென்ட் சாலைகளுடன் கூடிய தொகுப்பு வீடுகள் 1998-ல் கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகளே ஆன நிலையில் சிதிலமடைந்து விரிசல் விட்டு காணப்படுகிறது. மழைக் காலத்தில் வீட்டில் தண்ணீர் ஒழுகுகிறது. மேல் தளம் சரியில்லாமல் தரமற்று கட்டப்பட்டுள்ளதாக பழங்குடியினர் தெரிவித்தனர்.
மேலும் வீட்டின் அருகே மிக பெரிய ஏரி இருப்பதால் மழைக் காலங்களில் ஏரிநீர் வீட்டுக்குள்ளே புகுந்து விடுகிறது. இதனால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நீர் உள்ளே புகாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை ரேஷன் கார்டு பெறாததால் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் இப்பாமர மக்களை சென்றடையவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை இவர்கள் உண்டதில்லை, மேலும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச கலர் டி.வி., இலவச கேஸ் ஸ்டவ், உயர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இலவச கல்வி உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் இம் மக்களுக்கு கிடைப்பதில்லை.
இம் மக்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டுகளை வழங்கி அரசின் நல திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தொகுப்பு வீடுகளை உடனடியாக பழுது பார்த்து மழைநீர் உள்ளே புகாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
ரேஷன் கார்டு குறித்து செஞ்சி வட்ட வழங்கல் அலுவலர் சேகர் கூறுகையில், "ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தால் ரேஷன் கார்டு வழங்கப்படும்' என்றார்.
ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், "அனைவருக்கும் ரேஷன் கார்டு பெற்று தர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும்' தெரிவித்தார்.