தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக களம் இறங்குகிறது தொடக்க கல்வித் துறை

சேலம், ஏப். 18: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளிகளுடன் போராடி வரும் தொடக்கக் கல்வித்துறை நடப்பாண்டில் நேரடியாக களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளை விளம்பரப்படுத்தவும், விடுமு

க. தங்கராஜா

சேலம், ஏப். 18: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளிகளுடன் போராடி வரும் தொடக்கக் கல்வித்துறை நடப்பாண்டில் நேரடியாக களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளை விளம்பரப்படுத்தவும், விடுமுறை முடிவதற்குள் வீடு வீடாகச் சென்று பள்ளி வயது மாணவர்களை தொடக்கப் பள்ளியில் சேர்க்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கவலை அளிக்கும் விதமாக குறையத் தொடங்கியுள்ளது. இன்று வரை இது உயர்ந்ததாக தகவல்கள் இல்லை. தொடக்கக் கல்விக்காக சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தும், சில புதிய திட்டங்கள் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் எதிர்பார்த்த பலன் கிடைத்தபாடில்லை.

இந்நிலையில் கட்டாய இலவசக் கல்வி சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை புகுத்தும் சமச்சீர் கல்வியை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

விளம்பரம்: பள்ளிக் கல்விக்காக இவ்வளவு செலவிட்டும் அரசுப் பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை என்பது குதிரைக் கொம்பாகவே இருந்து வருவதால் இத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளிகள் குறித்தும் அதில் உள்ள வசதிகள் குறித்தும் விளம்பரப்படுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், கிராம கல்விக் குழுக்களுக்கு  அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கட்டணம் ஏதுமின்றி மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகம், சீருடை ஆகியவை இலவசம், அன்பான ஆசிரியர்கள், சிறந்த ஒழுக்கம், தரமான கல்வி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான சத்துணவு, மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை, தொலைக்காட்சி வழி பாடங்கள், லேப்-டாப்கள், கணிப் பொறிகள், ஆங்கில வழி பள்ளிகளுக்கு இணையான ஏ.பி.எல். முறை, சமச்சீர் கல்வி, ஆங்கிலத்தில் பேச பயிற்சிகள் அளிக்கப்படுவதாகக் கூறி துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக இப்போது வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வழக்கமாக ஜூன் முதல் தேதியில் இருந்துதான் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு விடுமுறை முடிவதற்குள்ளாகவே மாணவர் சேர்க்கையை முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

வீட்டிலேயே அட்மிஷன்: அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதும் ஆசிரிய-ஆசிரியைகள் வீடு வீடாகச் சென்று மாணவர் சேர்க்கைப் பணியில் ஈடுபட உள்ளனர்.  ஏதாவது ஒரு வீட்டில் ஜூலை 31 அன்று 5 வயது நிறைவடைந்த குழந்தை இருந்தால் வீட்டுக்கு வரும் ஆசிரியர், குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பார்த்தும் பெற்றோரிடம் விவரங்களைப் பூர்த்தி செய்தும் அந்த இடத்திலேயே மாணவர் சேர்க்கையை முடித்துவிடுவார்கள்.

எஸ்.எஸ்.ஏ. சார்பில் இப்போது நடத்தப்பட்டு வரும் கணக்கெடுப்பை வைத்தும் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்று தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இப்போது 4 முதல் 6 வயது வரையிலான சுமார் 22 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இதில் 94 சதவீத குழந்தைகள் எளிதில் அணுகும் வகையில் ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் அரசுப் பள்ளிகள் உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 34 ஆயிரம் அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் குழந்தைகள் கல்விக் கூடங்களில் சேர்க்கப்படுகின்றனர்.

ஆனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கையோ மிகவும் குறைவாகவே உள்ளது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகளிலும் மேம்படுத்த ரூ.4,821 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

என்ன பிரச்னை:
அரசுப் பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 26 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு முக்கியத் தேவையான விளையாட்டு மைதான வசதி சுமார் 13 ஆயிரம் பள்ளிகள் மட்டுமே உள்ளது. அதிலும் பள்ளிக்கு என்றே சொந்த மைதானம் உள்ள பள்ளிகள் சுமார் 10 ஆயிரம் மட்டுமே.

கழிப்பறைகள், மாணவிகளுக்கான கழிப்பறைகள், கட்டடங்கள், சுற்றுச் சுவர், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்தாலேயே அரசுப் பள்ளிகளை நாடி பெற்றோர் வரும் நிலை நிச்சயம் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT