திருப்பூர் : தொடர் மழை, தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விறகு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், திருப்பூரிலுள்ள சாய, சலவை ஆலைகள், காம்பேக்டிங், ரைசிங் உள்ளிட்ட பின்னலாடை உபதொழில் கூடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
÷திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியின் உபதொழில்களான சாய, சலவை, காம்பேக்டிங், ரைசிங் உள்ளிட்ட தொழில்களில் 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பின்னலாடை உற்பத்திக்கு முதுகெலும்பாக உள்ள இத்தொழில் கூடங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பின்னலாடை துணிகளை சலவை செய்து சாயமிடவும், அதன் சுருக்கங்களை சரி செய்து தையலுக்கு உகந்த துணியாக மாற்றவும் சாய, சலவை, காம்பேக்டிங், ரைசிங் உள்ளிட்ட தொழில் கூடங்களில் விறகுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு இந்நிறுவனங்களில் சுமார் 1,500 டன் விறகுகள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
÷அந்த நிறுவனங்களுக்குத் தேவையான விறகுகள் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளான மூலனூர், தாராபுரம், வெள்ளக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், மரங்கள் அழிவை தடுக்க சுற்றுச்சூழல் அமைப்புகள் விடுக்கும் கோரிக்கைகளை அடுத்து அரசு சார்பில் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், திருப்பூர் தொழிற்கூடங்களுக்குத் தேவையான மரங்களுக்கு நாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
÷இதையடுத்து, கடந்த ஆண்டு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3,500 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் வேலிமர விறகுகள் இந்த ஆண்டு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 5,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வேலம், கருவேலம் உள்ளிட்ட மரங்களின் விறகுகள் கடந்த ஆண்டு ஒரு டன் சுமார் ரூ. 2500-லிருந்து ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3,300 வரை உயர்ந்துள்ளது. இதில், கடந்த 15 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் மட்டும் அனைத்து ரக விறகுகளின் விலையும் டன்னுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், ஒரு லோடு (சுமார் 12 டன்) விறகுகள் வாங்கும்போது ரூ. 15 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுவதாக சாய, சலவை உள்ளிட்ட தொழிற்கூட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
÷பெரும்பாலும் திருப்பூரிலுள்ள விறகு வியாபாரிகள் நேரடியாக மரங்கள் வெட்டப்படும் இடங்களிலிருந்து கொள்முதல் செய்யாமல் இங்கு வரும் லாரிகளிலிருந்து விலைபேசி கொள்முதல் செய்கின்றனர். அதன்படி, தற்போது விறகுகள் கொண்டுவரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து வியாபாரிகளே விலையை உயர்த்தி விற்பதாகக் கூறப்படுகிறது.
÷இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.சாமியப்பன் கூறுகையில், மரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை அடுத்து கடந்த சில ஆண்டுகளில் திருப்பூர் தொழிற்கூடங்களுக்கு பயன்படுத்தும் விறகுகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிர, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நடைமுறை விலையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தி விற்கப்படுகிறது.
÷விறகுகளுக்காக கொண்டு வரப்படும் மரங்கள் அனைத்தும் குளக்கரைகள், காட்டுப் பகுதிகளில் இருந்தே வெட்டப்படுகின்றன. மழைக் காலங்களில் அத்தகைய இடங்களுக்குள் லாரிகள் செல்ல முடியாததால் விறகுகளுக்கான தட்டுப்பாடு அதிகரிக்கிறது. இத்தட்டுப்பாட்டை அடுத்து மழைக் காலங்களில் விறகுகளின் விலை பெருமளவில் உயர்த்தப்படுகிறது. இதனால், திருப்பூரிலுள்ள சாய, சலவை ஆலைகள், காம்பேக்டிங், ரைசிங் உள்ளிட்ட நீராவிகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான தொழிற்கூடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
÷இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அத்தகைய நிறுவனங்களுக்கு அரசே எரிவாயு இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அன்னிய செலாவணி அதிகளவில் ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கும் எரிவாயு வசதி செய்துதர வேண்டும். இதன் மூலம், எரி பொருட்களுக்கான செலவினம் குறைவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரங்கள் பெருமளவில் வெட்டப்படுவதை தடுக்க முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.